search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோகப்பயிற்சியின் பலன்களும் அதன் நரம்பியல் தொடர்பும்
    X

    யோகப்பயிற்சியின் பலன்களும் அதன் நரம்பியல் தொடர்பும்

    யோகா மேற்கொள்வதனால் உடல்நலம், மனநலம் மேம்படுகிறது மற்றும் தனிநபர் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை பல்வேறு சமகால ஆய்வுகள் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    உலகின் பல்வேறு நாட்டு மக்களாலும் தினசரி கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘யோகக்கலை’ இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டது. யோகக்கலை என்பது, உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி என்றும் கூறப்படுகிறது.

    யோகாவின் பலன்களை ஒரு யோகி சொல்வதன் மூலமாகத்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் கேட்டிருக்கிறோம். யோகா மேற்கொள்வதனால் உடல்நலம், மனநலம் மேம்படுகிறது மற்றும் தனிநபர் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை பல்வேறு சமகால ஆய்வுகள் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உதாரணமாக, யோகப்பயிற்சியானது நாள்பட்ட வலியை குணப்படுத்துகிறது. கரோனரி தமனி நோய் (இதய நோய்), ஆஸ்துமா, நீரிழிவு, நிணநீர் மாறும் மார்பகப் புற்றுநோய் ஆகிய பல்வேறு நோய்களை சமாளிக்க உதவுகிறது.

    முக்கியமாக, மனச்சோர்வு, மனக்கலக்கம், ‘பெருவிருப்ப கட்டாய நடத்தைக் குறைபாடு’ (அதாவது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப யோசிப்பது அல்லது செய்வது, ஆங்கிலத்தில் இதன் பெயர் obsessivecompulsive disorder), விபத்துக்குப் பின்னான மன உளைச்சல் குறைபாடு (posttraumatic stress disorder) மற்றும் மனச்சிதைவு நோய் (schizophrenia) உள்ளிட்ட பல்வேறு வகையான மனநிலை குறைபாடுகளால் பாதிக்கப்படும் மக்களின் நல்வாழ்வுக்கு யோகா பெரிதும் உதவுகிறது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    அதெல்லாம் சரி, ‘யோகாவினால் உடலுக்குள் ஏற்படும் உடலியல் நிகழ்வுகள், மாற்றங்கள் என்னென்ன, யோகாவின் பலன்களை ஏற்படுத்தும் அடிப்படை அறிவியல் காரணிகள் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்டால், மூச்சுப்பயிற்சி யோகாவான ‘பிராணாயாமம்’ மற்றும் தியானம் ஆகியவற்றால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இதுவரை மார் 300க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



    ஆனால் உடலை வளைத்து மேற்கொள்ளப்படும் ஆசனங்களின் பலன்கள் குறித்து இதுவரை வெகு சில ஆழமான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகது. சமீபத்தில் சாதரணமான யோகா ஆசனங்கள் (simple yoga poses) மற்றும் சக்தி ஆசனங்கள் (power poses) எனப்படும் இரண்டு வகையான யோகாசனங்களின் பலன்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளரான ஏக்னியஸ்கா கோலக் டி சவாலாவின் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில், மூளையின் தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் மிக நீளமான நரம்பு மற்றும் பத்தாவது கிரேனியல் நரம்பு என்று அழைக்கப்படும் ‘வேகஸ் நரம்பு’ (vagus nerve)‚°‹ யோகாசனத்தின் பலன்களுக்கும் தொடர்பு உண்டு என்று உலகில் முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு வகையான ஆசனங்களில், சக்தி ஆசனங்களை மேற்கொண்டவர்களுக்கு ஆற்றல், அதிகார உணர்வு (sense of power) மற்றும் தன் மதிப்பு (self esteem) ஆகியவை மேம்பட்டது கண்டறியப்பட்டது. யோகாவின் உளவியல் பலன்களான இவற்றுக்கான காரணம் என்னவென்று ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில், ‘சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் செரிமானம் ஆகிய உடலியல் நிகழ்வுகள் மற்றும் சமூக தகைமை (social competence) மற்றும் பயனுள்ள உணர்ச்சி கட்டுப்பாடு ஆகிய மனநல திறன்களுக்கு காரணமான வேகஸ் நரம்பு, யோகாவின் பலன்களுக்கு காரணமாக இருக்கலாம்’ என்று கண்டறியப்பட்டது.

    உடலின் சுயநினைவற்ற செயல்பாடுகளான சுவாசம், ரத்த ஓட்டம் போன்றவற்றிற்கு காரணமான, அடிப்படையான இணைப்பரிவு நரம்பு மண்டலம் (parasympathetic nervous system) யோகாவின் சக்தி ஆசனங்களால் தூண்டப்படுகிறது என்றும், அதன் ஒரு முக்கிய அங்கமான மற்றும் ‘மூளையை (மனதை) உடலுடன் இணைக்கும்’ வேகஸ் நரம்பின் செயல்பாடுகளும் தூண்டப்படுகின்றன என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தொகுப்பு: முனைவர் ஹரிநாராயணன்
    Next Story
    ×