search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தங்க குடத்தில் புனித நீர் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது
    X

    ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தங்க குடத்தில் புனித நீர் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது

    துலா மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் இன்று ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
    ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால் காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்தாண்டு துலா மாதம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பஞ்சாங்கப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) பிறக்கிறது. இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு, யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதையொட்டி இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து சேருகிறார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளு கிறார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஆகியோர் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
    Next Story
    ×