search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி திருவிழாவும், மாசி திருக்கல்யாண விழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறுகிறது. ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. சித்திரை மற்றும் மார்கழித் திருவிழாவின் போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும். ஆவணித்திருவிழாவின் போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 10.10 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்து வந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் பாரதி, கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் வெங்கடேஷ், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வருவர். இதைத்தவிர அபிஷேகம், சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜை, அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது.

    வருகிற 5-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி பூதேவி இரண்டு அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவர். திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    Next Story
    ×