search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    “மாணிக்கம் விற்ற லீலை” அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்.
    X
    “மாணிக்கம் விற்ற லீலை” அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்.

    மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் மாணிக்கம் விற்ற லீலை அலங்காரம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை‘ புராணம் பின்வருமாறு:-

    மதுரையில் வீரபாண்டியன் நீதியுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். ஒரு சமயம் வேட்டையாடச்சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். இதனை அறிந்த அரசனின் காமக்கிழத்தியர்களின் பிள்ளைகள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணி மகுடத்தையும் திருடிச்சென்றனர்.

    இதனையடுத்து இளவரசனுக்கு முடிசூடலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    ஆனால் மணிமகுடம் போன்றவை களவு போனதை சோமசுந்தரப்பெருமானிடம் முறையிட எண்ணி கோவிலுக்கு சென்றனர். வழியில் சோமசுந்தரப்பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக அவர்கள் முன் தோன்றினார். அரண்மனையில் நடந்ததை அவர்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் புதிய மணிமகுடம் செய்வதற்காக விலை உயர்ந்த நவமணிகளை அவர்களிடம் கொடுத்தார். அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்பதையும் எடுத்துச்சொன்னார்.

    புதிய மகுடத்தை சூட்டி இந்த குமாரனை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என கூறி மறைந்தார். அமைச்சர்கள் மகிழ்ச்சி அடைந்து திரும்பிச்சென்றனர். அதன்பின் திருடப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப்பெற்றன. அபிடேகபாண்டியனுக்கு மகுடம் சூட்டப்பட்டு, செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான். மக்கள் நலமுடன் வாழ்ந்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.
    Next Story
    ×