search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    வடமதுரையில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வடமதுரையில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 9 மணியளவில் விஷ்வக்சேனருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கருடாழ்வார் படம் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் நகர்வலம் எடுத்து செல்லப்பட்டு சன்னதியை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் கொடிமரம் அருகில் அமர்ந்தார். அதன் பின்னர் புண்யாவாஜனம், கலசபூஜை, சோட உபச்சார பூஜைகள் செய்யப்பட்டு காலை 11.30 மணியளவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டனர். பின்னர் இரவு 9 மணியளவில் அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி வரை தொடர்ந்து பல்வேறு மண்டக படிதாரர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், ஷேச, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 5-ந் தேதியும், தேரோட்டம் 7-ந் தேதியும் நடைபெற உள்ளது. வழக்கமாக மாலை வேளையில் நடைபெறும் தேரோட்டம், இந்த வருடம் சந்திரகிரகணத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வேல்முருகன், செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×