search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm tree"

    • குடியிருப்பு பகுதியில் உள்ள பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன
    • அந்த வழியாக சென்ற மாணவர்களை கடித்து வந்தன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், பெரிய மடப்புரம், கீழத்தெரு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.

    இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் பொறையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

    • சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன.

    கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.

    ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மென்மையானது என்பதால் தாய்ப்பாலுக்கு இணையான பானம் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்களும் உள்ளன. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி, நுங்கு ஆகியவை கிடைக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    'கள்' தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார். அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.

    இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயர் காலத்து புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கள் தடை காரணமாக தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்து விட்டது. 45 கோடி பனை மரங்கள் செங்கல் சூளைக்கும் சுண்ணாம்பு காலவாய்க்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு விட்டது.

    தென்னை மரத்தை 3 முதல் 4 ஆண்டுகளில் வளர்த்து விடலாம். ஆனால் பனை மரத்தை நினைத்த உடன் உருவாக்க முடியாது. பனை மரம் வளர 13 முதல் 14 ஆண்டுகள் ஆகும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலில் உள்ள லோரிக் ஆக்சிட் கள்ளில் அதிக அளவில் உள்ளன.

    கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பயன் அடைவார்கள். மேலும் 8 கோடி மக்களுக்கும் சத்தான இயற்கையான மென்பானம் கிடைக்கும். பனை மரத்தில் கள் இறக்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்காது. படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பன்னாட்டு விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டலாம்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினாலே தமிழகம் தலை நிமிரும். முதன்மை மாநிலமாக மாறும்.

    மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.

    கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்கினால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    • 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

    • கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது.
    • நாங்குநேரி தொகுதியை செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்வதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    களக்காடு:

    நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன் நாங்குநேரி தொகுதியில் 1 லட்சம் பனை மர விதைகள் நடும் பணிகளை தொடங்கி உள்ளார். இதன்படி தினசரி பல்வேறு பகுதிகளில் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    அந்த வகையில் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு, தொடங்கி வைத்தார்.

    அதனைதொடர்ந்து களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவிகளும் பனை மர விதைகளை நட்டனர். அதன் பின்னர் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    1 லட்சம் பனை விதைகள்

    நாங்குநேரி தொகுதியில் பல இடங்களில் வறட்சி காணப்படுகிறது. எனவே நாங்குநேரி தொகுதியில் நிலவும் வறட்சியை நீக்கி, செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவில் இந்த பணிகளை தொடங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக 1 லட்சம் பனை மர விதைகளையும் நட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பனை மரங்கள் ஏராளமாக உள்ளன. பனை மர தொழில் அழிந்து வந்தது. இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, பனை மர தொழிலை ஊக்குவித்து வருகிறார். இதற்காக பனை மர தொழிலாளர்களுக்கு நல வாரியமும் அமைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், ஜார்ஜ்வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும்.
    • பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும். ஊர் பெயரோடு ஊர்ஊராய் சென்று விற்பனை செய்வதுதான் உடன்குடி கருப்பட்டி.

    சர்க்கரை நோய் வராது

    பனைமரத்தின் இயற்கை பானமான பதநீரை எடுத்து, அதில் பக்குவமாய் சுண்ணாம்பு கலந்து குடித்தால் சர்க்கரை நோயே வராது.

    பனை மரத்தில் தினசரி காலை, மாலை என 2 முறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பல வகையான எந்திரங்கள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரு சில நாளில் செயல் இழந்து விடுகிறது.

    கயிறு மூலம் பனை மரத்தில் தடுப்பு அமைத்து ஏறி இறங்குவதும், காலில் நார் மாட்டிக்கொண்டு பனைமரத்தை சேர்த்து கட்டிப்பிடித்து ஏறி இறங்குவதும் தான் இப்போது நிலைத்து நிற்கிறது. பனை மரத்தில் ஏறி பதநீர் தரும் பாளைகளை இடுக்கி, அரிவாளால் சீவி பக்குவப்படுத்தி பதநீர் போட வைப்பது எல்லோருக்கும் தெரிந்த கலை அல்ல.

    புவிசார் குறியீடு

    தினசரி 2 முறை பதனீர் தரும் பாளையை சீவி விட வேண்டும். இப்படி தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இத்தொழிலில்ஈடுபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

    மேலும் இத்தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு வகையான மானியங்கள் வழங்க வேண்டும் என்றும், பனை மரங்களை வளர்ப்பதற்கும் மானியம் கொடுக்க வேண்டும் என்றும் தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.

    இது பற்றி தாண்டவன்காடு தமிழ்ராஜ் என்பவர் கூறியதாவது:-

    கற்பகதரு என்று சொல்லக்கூடிய பனைமரம் மட்டும்தான் வேர் பகுதியில் இருந்து தலை ஓலை வரை அதாவது அடி முதல் உச்சி வரை 100 வகையில் மக்களுக்கு பயன்தருகிறது.

    இந்த பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். வேறு எந்த மரமும் 100 வகையில் மக்களுக்கு பயன்தருவதில்லை. பணந்தும்பு, கால் மிதி, தும்பு மூலம் பல வகையான பொருட்கள் பனமரக்கட்டை. பனை ஓலை பெட்டி, பனை ஓலைக்கு வண்ணம்பூசி பலவகையான வண்ண வண்ண பெட்டிகள், நுங்கு, பணம்பழம், பனங்கிழங்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    நிலத்தடி நீர்

    கூரைகள் அமைப்பதற்கு பனைமர கட்டை, பனைமர ஓலை அதை கட்டுவதற்கு பனைமர நார் இப்படி 100 வகையான பயன்களை சொல்லலாம். அப்படிப்பட்ட பனை மரத்தை அழிக்கவே கூடாது. தோட்டங்களில் கரைகளிலும், வேலிகளின் கரைகளிலும் பனை மரத்தை வளர்த்தால், அது பலனும் தரும்.

    நிலத்தடி நீரையும் பாதுகாக்கும். இப்படிப்பட்ட பனைமரம் முன்பெல்லாம் மக்களோடும் மக்களாய் இணைந்து இருந்தது. தற்போது மக்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் செழுமை குறைந்து வறுமை அதிகரித்துவிட்டது. அதனால் பனைமரம் மீண்டும் மக்களோடு, மக்களாய் இணைவதற்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் உடன்குடி யூனியன் கவுன்சிலருமான பிரபாகர்முருகராஜ் கூறியதாவது:-

    உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என்பதில் நானும் மிகுந்த ஆவலாய் உள்ளேன். உடனடியாக புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும். கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய். நெல்லை என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, திண்டுக்கல் என்றால் பூட்டு.

    இந்த வரிசையில் உடன்குடி என்றால் கருப்பட்டி. இப்படி ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்பட்டிக்கு மேலும் சிறப்பு சேர்க்கையில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

    பனைமரச் தொழிலை பாதுகாப்பதும், அதில் இருந்து கிடைக்கும் 100 வகையான பொருட்களை தயாரிப்பதிலும், பனைமரம் என்ற கற்பக தெரு எவ்வளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ அவ்வளவுக்கு அதிகமாக மக்களின் தரமும் உயரும் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பனைத் தொழிலை போற்றுவோம் பனை மரத்தை வளர்ப்போம், பனை மரத்தினால் பயன்பெறுவோம் என்று கூறினார்.

    • மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் பனை விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நட திட்டமிடப்பட்டது.

    இதன்படி காயல்பட்டினம் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பனைமர விதைகள் மற்றும் கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

    நெல்லை மாவட்டத்தி லிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் 36 ஆயிரம் மர விதைகள் விதைக்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க கடந்த ஐந்து ஆண்டுகளாக மதர் சமூக சேவை அமைப்பு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

    இதன்படி இதுவரை 70 லட்சத்து 15 ஆயிரத்து 439 பனைமர விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.இந்த செயல் பாராட்டுக்குரியது. தொலைநோக்கில் பயன் தரக்கூடிய பனை மரங்களை வளர்க்கும் திட்டம்

    எல்லோரும் இணைந்து மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் பேசுகையில், தமிழகத்தில் 33 சதவீத மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே உள்ளன.அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 4 சதவீத மரங்கள்தான் இருக்கின்றன. ஆகவே அனைத்து பொதுமக்களும் மரம் நடும் பணியில் ஆர்வமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் கென்னடி வரவேற்று பேசினார்.

    மாநில துணைத் தலைவர் சுதாகர், மாநில செயலாளர் டேனியல் மோசஸ், மாவட்ட தலைவர் ராஜ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், வாவு கல்லூரி மாணவிகள், காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன்பட்டினம் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடாசலம்.இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் தனது வீட்டிலிருந்து திருமக்கோட்டை சாலை வழியாக இன்று களப்பால் நோக்கி சென்றபோது மறவக்காடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென முறிந்து வெங்கடாசலம் மீது விழுந்தது.இதில் காயமடைந்த வெங்கடாஜலத்தை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பனைமரம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    • மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்று ப்பாசனத்துக்கு, தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வறட்சி மற்றும் நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால் தென்னை மரங்கள் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.இதனால் மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதன்படி விளைநிலங்களில் தனிப்பயிராக பாக்கு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் மரங்கள் செழித்து வளர்ந்து, பாக்கு அறுவடையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-

    பாக்கு மரங்களுக்கு நவம்பர் ,பிப்ரவரி மாதங்களில் வாரம் ஒரு முறையும், ஜூன், ஜூலை மாதங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். வாய்க்கால் முறையில் ஒரு மரத்துக்கு 175 லிட்டர் தண்ணீரும், சொட்டு நீர்ப்பாசன முறையில் 16 - 20 லிட்டரும் தேவைப்படும். மரம் ஒன்றுக்கு தொழு உரம் 10 முதல் 15 கிலோ, 100 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். 5 வயதுக்கு குறைவான மரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும். நடவு செய்த 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். எக்டருக்கு 1,250 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றனர்.

    • நாட்டின் மொத்த பாக்கு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
    • நீண்டகால பலன் தரும் மரப்பயிரான பாக்கு பயிரிடப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில், சேலம், நாமக்கல், கோயம்புத்துார், நீலகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், நீண்டகால பலன் தரும் மரப்பயிரான பாக்கு பயிரிடப்படுகிறது. நாட்டின் மொத்த பாக்கு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு மேல் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழக பாக்கு உற்பத்தியில் 40 சதவீதம் சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

    குறிப்பாக, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூர், கொட்டவாடி, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், கருமந்துறை பகுதியில் ஆண்டு முழுவதும் நீர்பாசன வசதி கொண்ட நன்செய் நிலங்களில், 10,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.

    பாக்கு மரத்தோப்பு உருவாக்குவதற்கு, மரக்கன்றுகளை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்காவது நிழலில் வளர்க்க வேண்டும் என்பதால், அகத்தி மரத்தில் வெற்றிலை கொடிக்கால் அமைத்து, அதற்கு நடுவே பாக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 700 முதல் 800மரக்கன்றுகள் வரை நடப்பட்டு பாக்குத்தோப்புகள் உருவாக்கப்படுகிறது.

    பாக்கு மரங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால், தவறாது நீர்பாசனம் செய்து, உரமிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஒரு ஏக்கர் பாக்குத்தோப்பிலுள்ள பாக்குமரங்களில் இருந்து ஓராண்டுக்கு பாக்குக்காய்களை அறுவடை செய்து கொள்ள ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை வியாபாரிகள் குத்தகை கொடுக்கின்றனர். பாக்குக்காய்களை அறுவடை செய்யும் வியாபாரிகள், தோலுரித்து, வேகவைத்து பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்து நாடு முழுவதும் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் 30 ஆண்டுக்கு முன் 10,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்ட பாக்கு மரங்கள் முதிர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக மகசூல் கொடுப்பது படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2020க்கு முன் தொடர்ந்து 10 ஆண்டுகள் வாழப்பாடி பகுதியில் பருவமழை பொய்த்து போனதால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பாக்குமரத்தோப்புகள் நீர்பாசனத்திற்கு வழியின்றி காய்ந்து கருகி அழிந்தன. இதுமட்டுமின்றி, முதிர்ந்த பாக்குமரத்தோப்புகளை மீண்டும் உருவாக்குவதிலும், புதிய பாக்குமரத் தோப்புகளை உருவாக்குவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

    இந்நிலையில், கடந்த இரு ஆண்டாக வாழப்பாடி பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான, அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளும் நிரம்பின. கிராமங்கள் தோறும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இதனால், பாக்குமரத்தோப்புகள் உருவாக்குவதற்கேற்ற சூழல் உருவாகியுள்ளதால், முதிர்ந்த மரங்களுக்கு அடியிலேயே பாரம்பரிய அடிக்கன்று நடவு முறையில் பாக்குமரக்கன்றுகளை நடவு செய்வதிலும், அணை, ஆறு மற்றும் ஏரிப்பாசன நிலங்கள், ஆண்டுமுழுவதும் பாசன வசதி கொண்ட நன்செய் விளைநிலங்களிலும் பாக்கு மரக்கன்றுகளை நட்டு புதிய பாக்குமரத் தோப்புகள் உருவாக்குவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    புதிதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாக்குமரத்தோப்புகள் உருவாக்கப்படுவதால், எதிர்வரும் 3 ஆண்டுக்கு பிறகு வாழப்பாடி பகுதியில் பாக்கு மகசூல் இரு மடங்காக அதிகரிக்குமென, பாக்கு வியாபாரிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை அருகே மின் கம்பியில் விழுந்த பனை மரத்தை உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் துணை மின் நிலையம் உள்ளது. இதற்கு  பழைய பேட்டை உப மின் நிலையத்தில் இருந்து வரும் உயரழுத்த மின் பாதையில் கண்டியபேரி அருகே பனை மரம் விழுந்து மின் தடை ஏற்பட்டது.  

    இதனால் மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் மாற்று வழியாக தாழையூத்து உப மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு பொது மக்கள் பாதிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பின்பு தீயணைப்புத்துறை மேற்பார்வையில் அந்த பனை மரம் அகற்றப்பட்டு மறுபடியும் பழைய பேட்டை உப மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே பனைமரம் ஏறும் தொழிலாளி மரத்திலேயே உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார்.

    மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே பிணமாக தொங்கி விட்டார்.

    தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் ஏறி பிணத்தை மீட்டு கொண்டு வந்தனர்.

    ×