

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது.
சென்னையில் உள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) இ.சி.ஐ, பெந்தேகோஸ்து, உள்ளிட்ட அனைத்து திருச்சபை சார்ந்த ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடந்தது.
இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரது உயிர் போகும் நிலையில் 7 வார்த்தைகளை கூறினார்.
பிதாவே இவர்களுக்கு மன்னியும்.... தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்கள், இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதேசியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்... ஸ்திரியே அதோ உன் மகன்... சீசனை அதோ உன் தாய்...
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்!, தாகமாய் இருக்கிறேன், முடிந்தது, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் ஆகிய 7 வார்த்தைகள் குறித்து சிறப்பு ஆராதனையில் தியானம் செய்யப்பட்டது.
சாந்தோம் தேவாலயம், சி.எஸ்.ஐ. கதிட்ரல் பேராலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர், ஆலயம் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி, பெரம்பூர் லூர்து மேரி ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல (சி.எஸ்.ஐ திருச்சபைகளிலும் ஆயர்கள் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது.
இயேசு சிலுவையில் மரித்த இந்த நாளை நினைவு கூர்ந்து உபவாசம் இருந்து ஆராதனையில் பங்கு பெற்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் தியானம் முடிந்த பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.