ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலிபர் அடித்து கொலை- சேற்றில் பிணம் வீச்சு

ஸ்ரீமுஷ்ணம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலிபர் அடித்து கொலை- சேற்றில் பிணம் வீச்சு
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.

ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com