

ஈரான்மீது இன்று (ஜூலை.8) இரவு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் இருநாடுகளுக்கிடையே கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்தநிலையில், தற்போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி, நேற்று இரவு அமெரிக்க ராணுவம் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் ஈரானிய புரட்சிகர காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை இலக்கு வைத்து மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. இருநாடுகளின் பரஸ்பர தாக்குதல்களுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் இருந்து இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இருநாடுகளும் தாக்குதலை தொடர்வதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் கச்சா எண்ணெய்யின் விலை 5% உயர்ந்துள்ளது.
போர் தொடர்ந்தால், உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக முடங்கி, மீண்டும் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.