ரஷியாவில் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்.. 8 பேர் பலி - 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மகப்பேறு மருத்துவமனை மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
 
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி
மாஸ்கோ அருகே சேமிப்பு கிடங்கில் புகை எழும் காட்சி
Published on

உக்ரைன் - ரஷியா போர் 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதல்

ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் டிரோன்கள் தாக்கியுள்ளன.

உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடோவ்ஸ்க் நகரில் அமைந்திருந்த கிடங்கில் நைட் ஷிப்ட் வேலை செய்துகொண்டிருந்த 7 தொழிலாளர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

மாஸ்கோவிற்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிடங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அங்கு 24 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் போது சிதறிய டிரோன் பாகங்கள் அருகில் இருந்த ஒரு மழலையர் பள்ளி கட்டிடத்திலும் விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தியது.

எலெக்ட்ரோஸ்டல் நகருக்கு வடக்கே உள்ள நோகின்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் கிடங்கையும் உக்ரைன் டிரோன்கள் தகர்த்தன.

அங்கு ஏற்பட்ட பயங்கர தீ மற்றும் நச்சுப் புகை காரணமாக, அதற்கு மிக அருகில் இருந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், மாஸ்கோவிற்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள விளாடிமிர் நகரிலும் ஒரு குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

ஜெலென்ஸ்கி விளக்கம்

இந்தத் தாக்குதல்கள் குறித்துத் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி,

"மாஸ்கோ மற்றும் தம்போவ் பிராந்தியங்களில் உள்ள ரஷியாவின் இரண்டு மிக முக்கியமான தளவாட மையங்களை எங்களது நீண்ட தூர ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன.

இந்த இடங்களை ரஷியா வெறும் வணிகக் கிடங்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக, சர்வதேச தடைகளை மீறி ராணுவ டிரோன்கள் மற்றும் நேவிகேஷன் கருவிகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விநியோகிக்கும் மையங்களாகவே பயன்படுத்தி வந்தது. அதனாலேயே இவை அழிக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் 19 பிராந்தியங்கள் மற்றும் கிரிமியா, அசோவ் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் உக்ரைனின் 379 டிரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com