

இஸ்லாமாபாத்:
அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் டீசல் விலை 54.9 சதவீதமும், பெட்ரோல் விலை 42.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. அங்கு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஒரு லிட்டர் டீசல் இந்திய பணத்தில் ரூ.173-க்கு விற்கப்படுகிறது. இது பாகிஸ்தான் பணத்தில் ரூ.520 ஆகும். பெட்ரோல் விலை இந்திய பணத்தில் ரூ.152-க்கு விற்கப்படுகிறது. இது பாகிஸ்தான் பணத்தில் ரூ.458 ஆகும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பாகிஸ்தானில் கடந்த மாதம் டீசல் மற்றும் பெட்ரோல் விலை ஏற்கனவே சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, பணவீக்கத்தை மேலும் உயர்த்தி, ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.