

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹார்முஸ் நீரிணையை' மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டின் வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக முடியும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும். இதன் வழியே எந்தவொரு வணிகக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் வணிகக் கப்பலைத் தாக்கியதற்கும், கடல் எல்லையை மூடியதற்கும் பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ், கியூஎஸ்எம் தீவு மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள ஈரானிய இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசி வருகிறது.
சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விலையைக் கொடுக்க வைக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது.
இந்த எரிசக்திப் பாதை மூடப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.