கொழும்பு-அம்பாந் தோட்டா துறைமுகங்களை மேம்படுத்த சீனா உதவி

நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொழும்பு-அம்பாந் தோட்டா துறைமுகங்களை மேம்படுத்த சீனா உதவி
Published on

கொழும்பு:

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, 6 நாட்கள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு கடந்த 25-ந்தேதி சென்றார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இலங்கையின், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தினேஷ் குணவர்த்தனேவின் சீன பயணம் நேற்று நிறைவு பெற்றது.

இந்த நிலையில் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு, அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், பிற கடனாளிகளுடன் நட்புறவான தொடர்பை பேணவும், சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்கவும், நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும், அதன் நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.

கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இதை பெல்ட் அண்ட் ரோடு' கட்டுமானத்தின் முதன்மைத் திட்டங்களாக மாற்றுவதற்கும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன என்று தெரிவித்தது.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்து உள்ளது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com