மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு- கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு- கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Published on

கிருஷ்ணகிரி:

பெங்களூர் கோனப்ப அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பங்கி ராமா (38). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் எம்ஜிஆர் நகரில் தங்கி வசித்து வந்தார். இவருக்கும் பெங்களூர் அருகே உள்ள தொட்ட தொகூர் கிராமத்தைச் சேர்ந்த பீமாச்சாரி என்பவரின் மகள் சீதாலட்சுமி என்பவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் தேதியன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

சம்பங்கிராமா ஓசூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பங்கிராமாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவி மற்றும் குழந்தையை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலைலில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியன்று கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பங்கிராமா மனைவியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் சீதாலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பங்கிராமாவை கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். 

அதில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சம்பங்கிராமாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com