

கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், காளியாகஞ்ச், காரக்பூர் சதார் மற்றும் கரிம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கரிம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரும் பாஜக துணைத் தலைவருமான ஜாய் பிரகாசுக்கும் எதிர்தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் ஜாய் பிரகாசை, எதிர் கோஷ்டியினர் சாலையோரம் உள்ள புதரில் தள்ளிவிட்டதுடன், காலால் எட்டி உதைத்தனர். இதில் அவரது செல்போன் கீழே விழுந்தது. பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி வெளியே வந்தார்.
பாதுகாப்பு படையினர் அங்கு வந்ததும், அனைவரும் சிதறி ஓடினர். தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணைய தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.