சிரியாவில் செலவழித்த தொகையை ஈடுகட்ட எண்ணெய் வளங்களை திருடுகிறது அமெரிக்கா - ரஷியா குற்றச்சாட்டு

சிரியாவில் செலவிட்ட தொகையை ஈடுகட்ட அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைத்து அங்குள்ள எண்ணெய் வளங்களை திருடுவதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷிய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
ரஷிய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on

மாஸ்கோ:

சிரியாவின் வடக்கு பகுதியில் தன்னாட்சி அரசாங்கம் நடத்திவந்த குர்திஷ்களுக்கு வழங்கிவந்த பாதுகாப்பை அமெரிக்கா விலக்கிக்கொண்டதையடுத்து, அங்கு ரஷியா தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. 

சிரியா அரசுப்படைகள் மற்றும் துருக்கி படைகளுடன் இணைந்து சிரிய-துருக்கி எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் ரஷியா குர்திஷ் போராளிகளை விரட்டியடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. 

மேலும், குர்திஷ் போராளிகள் சிரிய அரசு படைகளுடன் இணைய விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யவும் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் கிழக்கு பகுதியான டேர் எஸ்ஸோர் என்ற இடத்தில் அமெரிக்கா இரண்டு ராணுவ தளங்களை அமைத்துள்ளது. இந்த தகவலை துருக்கி செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஆனால் இப்பகுதிகளில் எண்ணெய் வளம் மிகுதியாக உள்ளதாகவும், அவற்றை பயங்கரவாதிகள் கைப்பற்றிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே ராணுவ தளம் அமைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், சிரியாவில் அமெரிக்கா ராணுவ தளம் அமைத்துள்ளது குறித்து மூத்த ரஷிய சட்டவல்லுனர் கோசச்சிவ் கூறுகையில், ' சிரியாவில் உள்ள டேர் எஸ்ஸோர் பகுதியில் ராணுவ தளங்களை அமைப்பது எண்ணெய் வயல்களை பயங்கரவாதிகளை கைப்பற்றிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தான் என அமெரிக்கா கூறுகிறது. 

இது ஒரு நேரடி காரணமாக இருந்தாலும், சிரியாவில் இதுவரை அமெரிக்கா செலவிட்ட மொத்த செலவு தொகையையும் சரிக்கட்ட எண்ணெய் வளங்களை திருடுவதற்காகவே அப்பகுதியில் தனது ராணுவ தளங்களை அமைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்லாமல், சிரிய நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது’ இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com