பெண்களுடன் பிரச்சினை: திருப்பூரில் 2 போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்டு

பெண்கள் தொடர்பான பிரச்சினையில் தொடர்புடைய 2 போலீசாரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ராஜீவ்காந்தி (36). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் போலீஸ்காரர் ராஜீவ்காந்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

மனைவி, குழந்தைகளுக்கு தெரியாமல் அந்தப்பெண்ணை பல்லடத்தில் தனியாக குடித்தனம் வைத்துள்ளார். சம்பவத்தன்று ராஜீவ்காந்திக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜீவ்காந்தி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் சேவூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ராம்பிரகாஷ். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று அவினாசி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உளவுப்பிரிவு போலீஸ்காரராக நியமிக்கப்பட்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இது குறித்து பெண்ணின் உறவினர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி போலீஸ்காரர் ராம்பிரகாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். பெண்கள் தொடர்பான பிரச்சினையில் திருப்பூர் மாவட்டத்தில் 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com