ஊட்டி மலைப்பாதையில் ராட்சத மரம் சாய்ந்து ராணுவ வீரர் பலி

ஊட்டி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ராட்சத மரம் சாய்ந்து ராணுவ வீரர் பலியானார்.
ஊட்டி மலைப்பாதையில் ராட்சத மரம் சாய்ந்து ராணுவ வீரர் பலி
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ வீரராக இருந்தவர் பிரதீப் (வயது 26). இவர் மராத்தான் போட்டியில் பங்குபெற கோவை ராணுவ மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இன்று காலை கோவையில் பயிற்சியில் ஈடுபட்டார். ராணுவ வீரர் பிரதீப்பின் சொந்த ஊர் கேரள மாநிலம் முட்டம் பகுதியாகும். இவரது தம்பி பிரதீஷ் (26) வீட்டு கடன் பெறுவது சம்பந்தமாக கோவையில் பயிற்சி பெறும் பிரதீப்பை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார். இரட்டையார்களான இருவரும் வீட்டு லோன் பெறுவது குறித்து பேசினர்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் குன்னூருக்கு புறப்பட்டனர். ராணுவ வீரர் பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பிரதீஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று சூறாவளியுடன் மழை பெய்தது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

பிரதீப் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மேட்டுப் பாளையம்- குன்னூர் இடையே உள்ள மரப்பாலம் அருகே வந்தபோது சாலை ஓரம் இருந்த ராட்சத மரம் சாய்ந்தது. மரம் சாய்வது தெரிந்தும் சுதாரிக்க முடியாமல் பிரதீப் தடுமாறினார். அந்த நேரத்தில் ராட்சத மரம் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் ராணுவ வீரர் பிரதீப் படுகாயம் அடைந்தார்.

மரம் சாயந்ததில் 2 கார்கள் சிக்கி நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 காரில் பயணம் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சுற்றுலா பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த பிரதீப் மற்றும் லேசான காயம் அடைந்த அவரது தம்பி பிரதீஷ் ஆகியோரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராணுவ வீரர் பிரதீப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். லேசான காயங்களுடன் பிரதீஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து முறைப்படி வெலிங்டன் ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com