டெல்லியில் காற்றுமாசு: பாராளுமன்ற கூட்டத்தொடரில் முகமூடி அணிந்து விவாதத்தில் பங்கேற்ற பெண் எம்.பி

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசுபாட்டை சுட்டிக்காட்டும் விதமாக திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. பாரளுமன்ற கூட்டத்தொடரில் முகமூடி அணிந்து விவாதத்தில் பங்கேற்றார்.
எம்.பி. ககோலி கோஷ் தாஸ்டிதர்
எம்.பி. ககோலி கோஷ் தாஸ்டிதர்
Published on

புதுடெல்லி:

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் அளவு, தொழிற்சாலை மற்றும் வாகனப்புகை போன்ற காரணங்களால் டெல்லியில் மக்கள் சுவாசிக்க தகுதி அற்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது. இதனால் காற்றின் தரத்தை உயர்த்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்ற மேற்குவங்க மாநிலம் பரசட் தொகுதி பெண் எம்.பி.யான ககோலி கோஷ் தாஸ்டிதர் தலைநகரில் நிலவி வரும் காற்று மாசுபாட்டை எடுத்துரைக்கும் விதமாக தனது முகத்தில் முகமூடி அணிந்து வந்தார். 

பின்னர் மக்களவை விவாதத்தின் போது பேசிய ககோலி கோஷ் தாஸ்டிதர், ' உலகத்தில் உள்ள அதிக காற்று மாசுபாடு நிறைந்த 10 நகரங்களில் 9 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. 

இந்த காற்று மாசுபாடு தொடர்பாக உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்தியா குறித்து மிகவும் பாதகமான கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக டெல்லியில் கூடிய விரைவில் மக்கள் மிகப்பெரிய அளவிலான மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைக்கு உள்ளாகலாம். 

மத்திய அரசு சுவச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டுவந்திருப்பது போன்று மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க ஒரு திட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவரக்கூடாது? நாட்டில் நிலவிவரும் காற்று மாசுபாடு பிரச்சனையின் முக்கியத்துவத்தை மத்திய அரசுக்கு உணர்த்தி கவனத்தை ஈர்க்கவே நான் முகமூடி அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளேன்’ இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com