

சென்னை:
ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன், தொழிலாளி. இவரது மனைவி லீலாவதி. ராமச்சந்திரனின் அக்காள் அலமேலு.
இவர்களுக்கு சொந்தமான இடம் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளனர். இதற்காக கச்சூர்மேடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 18 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகையை அவர்கள் திருப்பி கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் கடன் கொடுத்தவர் அந்த புதிய வீட்டை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து ராமச்சந்திரன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம், டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆனால் இது பற்றி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ராமச்சந்திரன் இன்று காலை மனைவி லீலாவதி, அக்காள் அலமேலு ஆகியோருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர்கள் 3 பேரும் தங்களது உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews