ஆந்திரா சட்டசபை தேர்தல் - தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்
அமராவதி:
ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மந்திராலயம் தொகுதி வேட்பாளராக டிக்கா ரெட்டி போட்டியிடுகிறார். இவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மந்திராலயம் தொகுதியின் ககாய் பகுதியில் டிக்கா ரெட்டி தனது தொண்டர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவர்களை கண்டனர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் டிக்கா ரெட்டி மற்றும் அவரது பாதுகாவலரின் காலில் குண்டு பாய்ந்தது.
காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #AndhraPradeshAssemblyElection #TDP #Candidateinjuredingunfire

