தலைமைச் செயலாளர் சாய்குமார் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

சாய்குமார் தலைமைச் செயலாளராக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
saikumar
Published on

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின், தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும் தி.மு.க. அரசில் முக்கிய பதவிகளை வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒவ்வொருவராக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்த சாய்குமார் தலைமைச் செயலாளராக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாய்குமார், 31.8.1966 அன்று பிறந்தார். மதுரை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

2018-21-ம் ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைச் செயலாளர்-1 ஆகவும் பணியாற்றி உள்ளார்.

இதற்கிடையே, வரும் ஆகஸ்டு 31-ம் தேதி சாய்குமார் பணி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு மேலும் 6 மாதத்துக்கு பணி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த அரசுகளும் தங்களின் அப்போதைய தலைமைச் செயலாளர்களுக்கு 3 முதல் சில மாதங்களுக்கு பணி நீட்டிப்பை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்துள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் இது நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com