

சென்னை:
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. காங்கிரசுக்கு 28, முஸ்லிம் லீக்-2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி- 2, மனிதநேய மக்கள் கட்சி- 2, ம.தி.மு.க- 4, இந்திய கம்யூனிஸ்டு-5 தொகுதிகள் வீதம் ஒதுக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கூட்டணி கட்சிக்குள் இருந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தே.மு.தி.க, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை இலக்கில் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திருமாவளவனுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணா அறிவாயலத்திற்கு வந்த திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்து ஆனது.
இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.விற்கும் தொகுதி உடன்பாடு ஏற்படுகிறது. இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சிக்கு 8 அல்லது 9 தொகுதிகள் வரை ஒதுக்குவதற்கான வாய்ப்புள்ளது.