

திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட கட்டாயமாக எழுத வேண்டிய FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது.
தேர்வின் கடினத்தன்மை திடீரென உயர்த்தப்பட்டது, வினாத்தாள் அமைப்பில் முன்னறிவிப்பின்றி மாற்றங்கள் செய்யப்பட்டன, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தேர்வர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை.
தேர்வுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம். அதேநேரத்தில், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முன்கூட்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதும் அதே அளவிற்கு முக்கியமானது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் (NBEMS) உரிய விளக்கங்களையும், தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக
மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.