புதிய ஆட்சி அமைய உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் - ஆளுநருக்கு ஸ்டாலின் வலியறுத்தல்

தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117-ஆக உயர்ந்துள்ளது.
புதிய ஆட்சி அமைய உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் - ஆளுநருக்கு ஸ்டாலின் வலியறுத்தல்
Published on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் தவெக கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117-ஆக உயர்ந்துள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விரைவில் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும் முன்னால் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!

இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com