தஞ்சையில் நெற்பயிர்கள் காய்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியது வடிகட்டிய பொய்- அமைச்சர் கோவி.செழியன்

நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?
தஞ்சையில் நெற்பயிர்கள் காய்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியது வடிகட்டிய பொய்- அமைச்சர் கோவி.செழியன்
Published on

தஞ்சாவூா்:

தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கிற பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும், இன்றைய தினம் முதலமைச்சருடைய கருணை உள்ள திட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நலத்திட்டம் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பணியாற்றுகிற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.

இந்த மகிழ்வான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு 'வயிற்றில் பால் வார்த்ததை போல' என்று சொல்லுவார்கள். பால் வார்க்கவில்லை, உணவையும் வழங்கி அந்த மக்களுடைய உழைப்பின் திறனை ஊக்குவிக்கிற முயற்சி எடுத்திருக்கிற முதலமைச்சருக்கு அனைத்து தரப்பு மக்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்று எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.

வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு? அ.தி.மு.க ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் அளவு எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.

இந்தத் தருணத்தில் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது வடிகட்டிய பொய். இதனை விவசாயிகளும், பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம். ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com