குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
Paracetamol for Children
Published on

குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்துகளில் அதிகளவில் ஆல்கஹால் கலக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடி விளக்கம் அளித்துள்ளது.

மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பரப்பப்படும் தவறான செய்திகளால் மக்களிடையே தேவையற்ற அச்சம் உருவாவதைத் தடுக்க இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சரியான விகிதத்திலேயே ஆல்கஹால் பயன்பாடு:

குழந்தைகளுக்கான திரவ வடிவ மருந்துகளில் சில குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கரைப்பதற்காகவும், மருந்து கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காகவும் ஆல்கஹால் மிகக் குறைந்த அளவில், பாதுகாப்பான விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

60 மி.லி பாட்டிலில் எவ்வளவு உள்ளது?

பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு இதில் ஆல்கஹால் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய சுகாதாரத்துறை, 60 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு பாராசிட்டமால் மருந்து பாட்டிலில் வெறும் 10% மட்டுமே, அதாவது 6 மி.லி அளவுக்கே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது. இந்த அளவு சர்வதேச மருத்துவ விதிமுறைகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது.

95% ஆல்கஹால் என்பதன் நிஜமான அர்த்தம் என்ன?

மருந்து பாட்டில்களின் லேபிள்களில் குறிப்பிடப்படும் "95% ஆல்கஹால்" என்ற வார்த்தையை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அது மருந்தில் 95% ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் அல்ல. மாறாக, அந்த மருந்து தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆல்கஹாலின் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் மருத்துவக் குறியீடே அதுவாகும்.

"மருத்துவக் குறியீடுகளையும், தொழில்நுட்ப வார்த்தைகளையும் தவறாகப் புரிந்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் போது, மருத்துவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். போலிச் செய்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை."

மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழேயே அனைத்துக் குழந்தை மருந்துகளும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், பெற்றோர்கள் எவ்வித பயமும் இன்றி மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com