விஜய்க்கு ஆதரவளிக்க தயாராகும் அதிமுக- எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அதிமுக தொண்டர்களுக்கு விஜயுடன் அமைக்கும் கூட்டணி ஆட்சி நிச்சயம் ஒரு உற்சாக டானிக்காகவே அமையும் என்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு ஆதரவளிக்க தயாராகும் அதிமுக-  எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
Published on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை பெற்று விஜயின் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக திகழ்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு உள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கலாமா என்கிற எண்ணமும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி விஷயத்தில் பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருந்தது.

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 இடங்களை அந்த கட்சி பெற்றிருக்கும் நிலையில் விஜய்க்கு ஆதரவளித்து எதிர்காலத்தில் வலுவான கூட்டணியை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கணக்கு போட்டுள்ளது. இதேபோன்று கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் விஜயுடன் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதும் தமிழக வெற்றி கழகத்தின் எண்ணமாக உள்ளது.

அதே நேரத்தில் அதிமுக போடும் கணக்கு வேறு விதமாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளதால் அதிமுகவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பா.ஜ.க. கூட்டணியை முழுமையாக உதறிவிட்டு விஜயுடன் கைகோர்ப்பதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று அந்த கட்சி எண்ணுகிறது.

இதன் மூலம் விஜய் ஆட்சி அமைப்பதற்கு முழுமையான ஆதரவை தெரிவித்து விடலாம் என்கிற எண்ணமும் அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தரப்பிலிருந்து இதுவரை காங்கிரசிடம் ஆதரவு கேட்டது போன்று அதிமுகவிடம் அதிகாரப்பூர்வமாக யாரும் கேட்கவில்லை என்று அந்த கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒருவேளை விஜய் தரப்பில் இருந்து நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ யாராவது பேசி ஆதரவை கேட்டால் அது தொடர்பாக ஆலோசித்து நிச்சயம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை அளிக்கும் முடிவைத்தான் அதிமுக எடுக்கும் என்று அந்த கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கு நிச்சயம் அதிமுக காரணமாக இருக்காது என்றும் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கு தயாராகவே இருக்கிறோம் என்றும் அந்த நிர்வாகி கூறியுள்ளார்.

தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் அதிமுக தொண்டர்களுக்கு விஜயுடன் அமைக்கும் கூட்டணி ஆட்சி நிச்சயம் ஒரு உற்சாக டானிக்காகவே அமையும் என்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாகவும் உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது சென்னையில் இருக்கும் நிலையில் விஜய் ஆதரவு கேட்கும் பட்சத்தில் அவர்களோடு கலந்து ஆலோசித்து எடப்பாடி பழனிசாமி தனது முடிவை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைப்பாரா, இல்லை அதிமுக ஆதரவோடு ஆட்சி அமைப்பாரா என்கிற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் பலமாக எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com