என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேலூரில் 2-வது பூத் கமிட்டி மாநாடு: 'ரோடு-ஷோ' நடத்த விஜய் திட்டம்
- 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
- மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார்.
சென்னை:
வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சி தலைவர் விஜய் வலுப்படுத்தி வருகிறார்.
234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் சுமார் 69 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதல்கட்ட மாநாடு கோயம்புத்தூரில் 2 நாட்கள் நடந்தது. 13 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய்யை வழிநெடுகிலும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து வரவேற்றனர். திறந்த வேனில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி வந்த விஜய் பொதுமக்களின் வரவேற்பை கண்டு திக்கு முக்காடினார்.
மாநாட்டில் பேசிய விஜய் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான் மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காகதான் இந்த பயிற்சி பட்டறை என அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.
விஜய் பேச்சு மற்றும் அவரை காண திரண்ட கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வேலூரில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யும் பணி சில தினங்களாக நடந்தது. இதற்காக வேலூர், கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் வேலூரில் மாநாடு நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வேலூரில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார். 'ரோடு-ஷோ' நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






