மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்: வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி
Published on

மதுரை:

தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வருகிற 11-ந் தேதி தை அமாவாசை ஆகும். இந்துக்கள் மூதாதையர்களுக்கு காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய தலங்களில் திதி கொடுப்பது வழக்கம்.

கொரானா காலத்திற்கு முன்பு மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு 2 விரைவு ரெயில்களுடன் 3 சாதாரண கட்டண ரெயில்கள் காலை 645, காலை 1245 மற்றும் மாலை 6.10 மணிக்கு இயக்கப்பட்டது.

ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசே‌ஷ காலங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டன.

பஸ்சில் செல்ல வேண்டுமெனில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ராமேசுவரம் செல்ல ரூ.120-க்கு மேல் செலவாகும். ஆனால் பயணிகள் ரெயில் கட்டணம் ரூ45. விரைவு ரெயில் கட்டணம் ரூ.85 மட்டுமே.

மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு நேரடி பயணிகள் ரெயில்கள் தற்போது இல்லை.

ராமேசுவரத்தில் இப்போது புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com