உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி - டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய ஆகஸ்டு 15 வரை தடை

சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை
டெல்லி செங்கோட்டை
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது. 

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஆபரேஷன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்தக்கூடும் என கூறப்படுகிறது.

இதற்கேற்றாற் போல், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்று முதல் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com