

சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது சென்னையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், அடையாறு உள்பட பல மண்டலங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்வு அடைந்து உள்ளது.
மாதவரத்தில் 1.27 மீட்டர், திருவொற்றியூர் மண்டலத்தில் 0.82 மீட்டர், மாதவரம் பகுதியில் 1.27 மீட்டர், ராயபுரம் மண்டலத்தில் 1.23 மீட்டர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா ஒரு மீட்டர், சோழிங்கநல்லூரில் 0.5 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்வு அடைந்து இருக்கிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சென்னையில் நிடித்தடி நீர்மட்டம் நன்றாக உயர்ந்தது. அதை தொடர்ந்து கோடை காலத்தில் மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழையால் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அடைந்து உள்ளது.
வருகிற வடகிழக்கு பருவமழையின்போது நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உருவாகும். தற்போது மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.