நடிகை சாந்தினி கருக்கலைப்பு செய்தது உண்மையா?- ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரணை

மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது.
நடிகை சாந்தினி
நடிகை சாந்தினி
Published on

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்...  நடிகை பாலியல் புகாரில் 6 பிரிவில் வழக்கு: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை

இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.

அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.

இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.

இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com