பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை: மாநில அரசுக்கு, பட்னாவிஸ் கண்டனம்
மும்பை :
பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிகான்னா டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பிரபலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்
உள்துறை மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மாநில அரசின் மனநலத்தை சோதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மகாவிகாஸ் அகாடி அரசு தனது அறிவை இழந்துவிட்டதா?. பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். பாரத ரத்னா விருது பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துபவர்களின் மனநலம், நிலைதன்மை குறித்து தற்போது விசாரணை நடத்த வேண்டும் என்பது போல தெரிகிறது.
உங்களின் மராத்திய பெருமை இப்போது எங்கே போனது?. உங்களின் மராட்டிய நாடகம் எங்கு உள்ளது?. அவர்கள் போன்ற முத்துகளை நாம் தேசத்தில் எங்கும் பெற முடியாது. நாட்டுக்காக ஒருமித்த குரல் எழுப்பிய அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என கூறுகிறீர்கள்" என கூறியுள்ளார்.

