கோவில்களில் மீண்டும் தொடங்கியது அன்னதானம்- ஏழை பக்தர்கள் வயிறார சாப்பிட்டனர்

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட 44 கோவில்களில் இன்று இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் காவேரி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் காவேரி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
Published on

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 754 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மதியம் கோவிலில் பந்தியில் இலை போட்டு சாப்பிட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபிறகு கோவில்கள் மூடப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கோவில்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டன.

ஆனாலும் இலைபோட்டு சாப்பிடும் அன்னதானம் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்சல் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பழனி முருகன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய கோவில்களில் முதல்முறையாக நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள 754 கோவில்களிலும் மதிய அன்னதானத்தை பந்தியில் இலையில் பரிமாற அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுத்தார். இன்றுமுதல் இலையில் அன்னதானம் பரிமாறப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட 44 கோவில்களில் இன்று இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானம் சாப்பிட்டனர்.

17 மாதங்களுக்கு பிறகு கோவிலில் இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அன்னதானம் வழங்கும் கோவில்களில் அன்னதான கூடங்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com