

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு அதனை கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மும்பையில் லாக்பாக்சா பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பிரசித்திப் பெற்றதைப் போலவே ஐதராபாத்தில் உள்ள கைராபாத் விநாயகரும் பிரபலமானவர்.
இங்கு 61 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையின் சொரூபம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்த வைக்கிறது. விநாயகருக்கு 12 தலைகள், 24 கைகள் மற்றும் 7 குதிரைகளில் வலம் வரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.