

அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஓதிமலை ரோட்டில் நடந்தது.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மாரிமுத்து பேசினார். அவர் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் குறித்து பேசியதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் அங்கு இருந்த மர்மநபர் மாரிமுத்து மீது கல்வீசினார். அப்போது கல் மாரிமுத்து மீது பட்டு அங்கு அமர்ந்து இருந்த இளந்தமிழன் சேக் என்பவரை தாக்கியது.
இதில் 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள் கல் வீசியது யார்? என்று தேடினர். அதற்குள் அங்கு இருந்து அந்த மர்மநபர் சென்றுவிட்டார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் 2 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட செயலாளர் தமிழ் செல்வம் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.