search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. தேர்தல் அறிக்கை அச்சிடும் பணி தீவிரம்
    X

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. தேர்தல் அறிக்கை அச்சிடும் பணி தீவிரம்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்சனை என்.எல்.சி. விரிவாக்கம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.

    பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களும் இதில் இடம் பெறுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி ஏற்கனவே கூறி இருந்தார்.

    அதன்படி தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை இடம் பெற செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நகல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சில திருத்தங்களை செய்ததுடன் புதிய அம்சங்கள் சிலவற்றையும் இடம் பெற செய்யுமாறு கூறினார்.

    அதன்படி தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது முழு வடிவத்தில் பிரிண்ட் செய்யும் பணி தொடங்கி விட்டது. இந்த பணி 2 நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைக்குள் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×