search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இன்று மாலை பேச்சுவார்த்தை
    X

    அ.தி.மு.க.-தே.மு.தி.க. இன்று மாலை பேச்சுவார்த்தை

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
    • தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. தே.மு.தி.க.வுடனான கூட்டணியை கடந்த 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், கே.பி.அன்பழகன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார்கள். அன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான பார்த்த சாரதி, இளங்கோவன், அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் முடிவாக உள்ளது. தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அடுத்தகட்டமாக பா.ம.க. உள்பட மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×