என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கும் கருணாநிதி சிலை
நாகர்கோவில் தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதியின் வெண்கல சிலை- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
- மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுவதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து புதிய அலுவலகம் கட்ட ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்தது. தற்பொழுது புதிய அலுவலக கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. 2 தளங்களுடன் பிரம்மிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம் லிப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா நாளை 7-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள் கே.என் நேரு, மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் கவுன்சிலர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுவதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் வேறு நபர்களை அனுமதிக்கவில்லை. மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. முதலமைச்சரை வரவேற்கும் வகையில் தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடியேற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்று விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.
முதலமைச்சர் வருகையடுத்து நாகர்கோவில் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் சாலையின் இரு புறங்களும் முதலமைச்சரை வரவேற்கும் வகையில் கொடி தோரணங்கள் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் வருகை தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






