

சேலம்:
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ் (வயது 62).
ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரியான இவர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த நான்கரை பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கப்பணமும் மாயமாகி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆள் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.#tamilnews