சேலம் அருகே ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

சேலம் அருகே ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டியதால் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே ஆபாச படம் எடுத்து மிரட்டல்: 2 மாணவிகள் தற்கொலை முயற்சி
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த 15 வயது மாணவி நடுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இருவரும் சேர்ந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் காடையாம்பட்டி வள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த செல்வமணி, (20) வேலன் (28), மற்றொரு செல்வமணி (18), துரைமுருகன் (19) ஆகியோர் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து தனது மோட்டார் சைக்கிளில் உட்காருமாறும், நான் பள்ளிக்கு கொண்டு விடுகிறேன் என்றும் வர மறுத்தால் உங்களை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை வெளியே விட்டு விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த 2 மாணவிகளும் தங்கள் வீட்டில் தெரிவித்தால் பிரச்சனை ஆகிவிடுமோ என்ற பயத்தில் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் 2 மாணவிகளையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நான்கு பேரில் ஒருவர் மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். மற்ற அனைவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com