

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தை தவிர்க்கும்படி ஈரானை கேட்டுக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் திடீரென சிரியா சென்றுள்ளார். சிரியா சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் ஆசாத் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக ரஷியா அந்நாட்டுடன் கைக்கோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈராக் வலியுத்தி வரும் நிலையில் புதின் சிரியா சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.