Puducherry Assembly Election| மத்திய அரசு நிதிக்காக பாஜகவுடன் கூட்டணி என்பது கையாலாகாத்தனம்- சீமான்

கூட்டணி அமைத்தால்தான் நிதி என்பது கொடுங்கோல் ஆட்சி அல்லவா? மாநிலத்தில் இருந்துதானே மத்திய அரசு நிதி பெறுகிறது.
Puducherry Assembly Election| மத்திய அரசு நிதிக்காக பாஜகவுடன் கூட்டணி என்பது கையாலாகாத்தனம்- சீமான்
Published on

புதுவையில் நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

முன்னதாக அவர் நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களிடம் தலைசிறந்த கனவு உள்ளது. இந்த கனவு முன்னோர்கள் துாக்கி சுமந்த கனவு. அதை மெய்ப்படுத்த முயற்சிக்கிறோம். அதிமுக, திமுக மாறி, மாறி ஒருவர் மீது ஒருவர் விமர்சிக்கின்றனர். இது பட்டிமன்றம்போல நடக்கிறது.

ஊழல் செய்த பணத்தில் ரூ.1000ம், ரூ.2 ஆயிரம், பிரிட்ஜ், கூப்பன் தருவதாக கூறுகின்றனர். 2 கட்சியும் வேறு, வேறு என கூறுவது அறிவீனம். காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக கட்சிகள் பெயர் மாறினாலும் கொள்ளை கொள்கை மாறாது. அவர்களுக்கு கொள்கையே இல்லை.

மக்களுக்காக இலவசங்களை அறிவிக்கிறார்களே, அந்த பணம் அவர்களின் பாட்டன் சொத்தா? பரம்பரை சொத்தா? தமிழ்நாட்டை சீரழித்து ரூ.10 1/2 லட்சம் கோடி கடனில் தள்ளியுள்ளனர். இந்த தொகையில் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களா செயல்படுத்தப்பட்டது?

கல்வி, சுகதார மேம்பாடா நடந்தது. இலவசங்களை கொடுத்து மக்களை கடனாளியாக்கி விட்டார்கள். மக்கள் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம், நடிகரை பார்க்க சென்று இறந்தால் ரூ.10 லட்சம் தருகின்றனர்.

ஆனால் எல்லையில் ராணுவ வீரர் இறந்தால் என்ன தருகிறார்கள்? இதையெல்லாம் யார் கேட்பது? சிறிய நகரமான சிங்கப்பூர், பின்லாந்து ஆகியவை எப்படி முன்னேறியுள்ளது? என பார்க்க வேண்டாமா? அங்கெல்லாம் நல்ல தலைவர்கள், கொள்கை எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.

அதனால்தான் அந்த நாடுகள் வளர்ச்சி பெறுகிறது. புதுவையில் மாறி, மாறி, காங்கிரசும், பாஜகவும் ஆட்சி செய்துள்ளன. இவர்களால் புதுவைக்கு ஏன் மாநில அந்தஸ்து வழங்க முடியவில்லை? காவிரி நீரை ஏன் பெற்றுத்தர முடியவில்லை.

தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என கூறும் கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது என தமிழன் ஏன் சொல்ல மறுக்கிறான்? தண்ணீர் தராத கட்சிகளுக்கு ஒரு ஓட்டு கூட இல்லை என சொல்ல வேண்டாமா? ரங்கசாமி பலமுறை புதுவை முதல்- அமைச்சராக இருந்துள்ளார்.

அவர் ஏன் மாநில அந்தஸ்து பெறவில்லை. ஏனென்னால் அவருக்கு மாநில அந்தஸ்து பெறும் நோக்கம் இல்லை. வாழும் காமராஜர் என கூறிக்கொள்ளும் அவர் எந்த கொள்கைக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்? மத்திய அரசுடன் கூட்டணி அமைத்தால்தான் மாநில அரசுக்கு நிதி கிடைக்கும் என்கிறார்.

கூட்டணி அமைத்தால்தான் நிதி என்பது கொடுங்கோல் ஆட்சி அல்லவா? மாநிலத்தில் இருந்துதானே மத்திய அரசு நிதி பெறுகிறது. அந்த நிதியை வழங்க கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேச பாஜகவுக்கு என்ன அருகதை உள்ளது. இந்தியா இந்தி பேசும், வடமாநிலம் மட்டும்தானா?

மத்திய அரசு நிதி தரும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறுவது கையாலாகாத்தனம். மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை, கோட்பாடு. மில்களை மூடியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தராதீர்கள். புதுவையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு செல்வது பேரம் பேசி பணம் பறிக்கத்தான்.

புதுவையை 10 ஆண்டுகளில் சுற்றுலா, தொழில் உட்பட பல வகையிலும் சிறந்த மாநிலமாக உருவாக்க முடியும். எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல காமராஜருக்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்காதது தொடர்பான குற்றச்சாட்டு உண்மைதான். இதை எப்படி திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வார்?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com