வளர்ச்சிக்கான தரவரிசையில் புதுவை அரசு சாதனை - நாராயணசாமி பெருமிதம்

நிதி அயோக் வெளியிட்ட வளர்ச்சிக்கான தர வரிசையில் புதுவை அரசு சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
Published on

புதுச்சேரி:

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிதி அயோக் வெளியிட்ட வளர்ச்சிக்கான தர வரிசையில் புதுவை மாநிலம் 66 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் யூனியன் பிரேதசங்களில் 2-வது இடத்தையும், பெரிய மாநிலங்களை உள்ளடக்கிய தரவரிசையில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மத்திய நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட சிறந்த நிர்வாகத்திற்கான தரவரிசையில் நாட்டிலேயே முதலிடத்தை புதுவை பெற்றது. நிதி அயோக் தர வரிசையிலும் புதுவை மாநிலம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. நிதி அயோக் தரவரிசைப்படி சட்ட ஒழுங்கு, நீதி, உறுதியான நிர்வாகம் ஆகிய பிரிவில் புதுவை மாநிலம் 94 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. இதில் ஆந்திரா மாநிலம் 86 புள்ளிகள் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளது. எரிசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி பிரிவில் புதுவை 97 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. இது பெருமைக்குரிய ஒன்று.

சுகாதாரத்துறையில் 71 புள்ளிகள் பெற்று யூனியன் பிரதேசங்களில் புதுவை முதலிடம் பெற்றுள்ளது. தரமான கல்விப்பிரிவில் 67 புள்ளிகள் பெற்று யூனியன் பிரதேசங்களில் 2-ம் இடும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த கல்விப்பிரிவில் புதுவை நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. பசியை போக்கும் நடவடிக்கையில் யூனியன் பிரதேசங்களில் 2-ம் இடம் பெற்றுள்ளது. தடைகள் பல இருந்தும், கவர்னரின் இடையூறுகளை எதிர்கொண்டு நம் புதுவை மாநிலம் இந்த சாதனையை புரிந்துள்ளது.

தடைகளை முறியடித்து வெற்றிப்பாதையில் புதுவை மாநிலம் தொடர்ந்து பயணிக்கும். மேலும் பல உயரிய சாதனைகளை படைப்போம். புதுவை மாநிலம் பல சாதனைகளை பெற உறுதுணையாக இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com