

சென்னை:
சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆங்காங்கே பொதுமக்களால் வீசப்பட்டு வருகிறது.
இந்த கழிவுகள் அனைத்தும் கூவத்தில் மிதந்து வந்து நேப்பியர் பாலம் அருகில் மெரீனா கடலில் கலந்து விடுகிறது. இதனால் கடல் நீர் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால் மாசுபட்டு வருகிறது.
இதை தடுப்பதற்காக தமிழக அரசு ‘கூவம் நதி மறுசீரமைப்பு திட்டம்‘ என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் கூவத்தில் மிதந்து வரும் பிளாஸ்டி கழிவுகள், குப்பைகளை தடுக்க ரூ.10 லட்சம் செலவில் ‘டிராஷ் பூம்‘ என வலை அமைப்பு எத்திராஜ் கல்லூரி அருகே கமாண்டர் இன்சீப் சாலையில் சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டது.
இங்கு கூவம் ஆற்றில் மிதந்து வந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் 40 லாரிகளுக்கு மேல் அகற்றப்பட்டன. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் 10 இடங்களில் புதிதாக ‘டிராஷ்பூம்‘ அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே, அமைந்தகரை, நேப்பியர் பாலம் என 3 இடங்களில் ‘டிராஷ் பூம்’ அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
மாநகராட்சியின் அந்தந்த வார்டு துப்புரவு அலுவலர்கள் மேற்பார்வையில் கூவத்தில் மிதந்து வரும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கூவம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ‘டிராஷ் பூம்‘ தடுப்பு வலைகளால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கடலில் கலக்காமல் தடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நடுவங்கரை பாலம், திருமங்கலம் பாலம், கோல்டன் ஜார்ஜ் பாலம், நொளம்பூர் பாலம், விருகம்பாக்கம் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் விரைவில் இந்த தடுப்பு வலைகள் அமைக்கப்பட உள்ளன.