

அமராவதி:
ஆந்திரப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமராவதி நகரில் நடைபெற்று வரும் நான்கு நாள் இந்திய பொருளாதார சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆந்திரப்பிரதேச ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, வங்காளதேசத்தை சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் 16 நாடுகளில் இருந்து வந்துள்ள 60 பொருளாதார வல்லுநர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இடையே உரையாற்றினார். அவர் பேச தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து அதிகபடியான சத்தம் வந்துள்ளது.
உணவு விநியோகம் செய்யப்படுவதே அந்த சத்தத்திற்கு காரணம் என்பதை அறிந்த ஜனாதிபதி உடனடியாக உரையை நிறுத்தினார். மேலும் தான் பேசிமுடிக்கும் வரை உணவு விநியோகம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய ஜனாதிபதி, “இந்த பொருளாதார உலகில் என்ன நடக்கிறது. இங்கும் அதே போன்ற செயல் நடப்பதை நான் பார்க்கிறேன். சில உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன், அது அமைதியை கெடுத்துவிட்டது. ஆகையால், சிறிது நேரம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்”, என கூறினார்.
இதையடுத்து உணவு பொட்டலங்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றினார்.