கானா-டெல்லி விமானத்தில் நடுவானில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இந்திய பயணி

நடுவானில் இந்திய பயணியின் முரட்டுத்தனமான செயல்களால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பெரும் அவதியடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்:

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து பாரீஸ் வழியாக கடந்த 5-ந்தேதி டெல்லி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இருந்த இந்திய பயணி ஒருவர் விமானம் கிளம்பியது முதலே விமானத்தில் அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அவரது முரட்டுத்தனமான செயல்களால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பெரும் அவதியடைந்தனர். இந்தியரின் அந்த செயலால் ஒரு கட்டத்துக்கு மேல் அவரை விமானத்தில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளால் நடுவானில் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்கேரியாவின் சோபியா விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த பயணியை அங்கே இறக்கி விட்டுவிட்டு விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. சோபியா விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்ட இந்திய பயணியை பின்னர் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்ட இந்திய பயணி குறித்த விவரங்களை ஏர் பிரான்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com