

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் டிராக்டரில் பிளிக்கல் பாளையம் காவிரி ஆற்றில் நள்ளிரவு மணல் அள்ளிக் கொண்டு அய்யம்பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.
அப்போது கரட்டூர் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜேடர் பாளையம் போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த மணலை அரசு அனுமதி இல்லாமல் அள்ளி, திருட்டு தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.
அவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நள்ளிரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திருட்டு தனமாக வாகனங்களில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.