குஜராத் தேர்தலில் இந்துத்துவா என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள்: ப.சிதம்பரம்

இந்துத்துவா என்ற ஆயுதத்தை பயன்படுத்தி குஜராத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் பேசினார்.
குஜராத் தேர்தலில் இந்துத்துவா என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள்: ப.சிதம்பரம்
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சமகால அரசியலில் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் தாக்கங்களும் தேவைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநிலத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் எழுத்தாளர் வே.மதிமாறன், வக்கீல் அருள்மொழி, ஊடகவியலாளர் அந்தோனி, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் அழகேசபாண்டியன், கவிஞர் சுகிர்த ராணி, கிறிஸ்டோபர் ஆகியோர் பேசினர். அம்பேத்கர்-பெரியார் விருதுகள் செல்வி ரவீந்திரன், போலீஸ் ஐஜி. (ஓய்வு) ஏ.ஜி.மவுரியா, எழுத்தாளர் அம்பேத்கர் பிரியன், லலிதா சுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பேத்கர் பிரியன் எழுதிய கக்கனின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

இந்துத்துவா என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றி பெற்று விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் இந்த முறையை தான் கையாண்டார்கள். குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்துத்துவா என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கு அவர் முயலுவார்.

காங்கிரஸ் அணியில் இளம் தலைவர்கள் இணைந்து இருக்கிறார்கள். அவர்களை சாதிய தலைவர்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். சமுதாய மக்களை ஒன்று திரட்டுவது தவறா?. சுதந்திர போராட்டம் எல்லோரையும் இணைத்தது. மக்களை திரட்டுவது எதை எதிர்த்து என்பதை பார்க்க வேண்டும். தங்கள் நலத்தை விட நாட்டின் நலத்திற்காக இணைபவர்களை சாதிய தலைவர்கள் என்பதா?. ஒரே மொழி, ஒரே இனம், ஒரே அரசியல் சித்தாந்தம் என்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து இந்த முயற்சி வெற்றி பெற்றால் அது அம்பேத்கருக்கு, பெரியாருக்கு கிடைத்த வெற்றி.

கடந்த 3 ஆண்டுகளில் நாம் நிறைய இழந்து விட்டோம். இந்த சரிவை ஈடுகட்ட வேண்டும். மக்களை இணைக்க வேண்டும் என்றால் எல்லா விதமான கருவிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். மக்களை திரட்டாவிட்டால் பா.ஜ.க. வெற்றி பெற்று விடும். அந்த வெற்றியை தடுக்க வேண்டும்.

குஜராத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. எல்லாவற்றையும் விட 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதிலேயும் அவர்களின் வெற்றியை தடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்று இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ். திரவியம், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com